சிலுவைப் பாதை

சிலுவைப் பாதை






நிலை 1:
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசுவை  சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிடுகிறேன்




வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை லட்சியம், வசதியாக சுகமாக வாழவேண்டும், அதற்காக எதுவேண்டுமாலும் செய்யலாம் போன்ற சித்தாந்தங்களின் ஒரு பிம்பமாகவே பிலாத்து நீதி இருக்கையில் அமர்ந்திருந்தான். ஒருவனின் இலக்கை அடைய, அல்லது வெற்றிபெற  ‘உண்மை’ தர்மசங்கடமான ஒரு தடைக்கல் என்பது அவனது மதிப்பீடு.  உண்மை என்பதே ஒருவனின் வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒரு சித்தாந்தம் என்பது அவனது அசைக்கமுடியாத  கோட்பாடு. அதனால்தான் “உண்மையா! அது என்ன” என்று இயேசுவிடம் கேட்டான். இத்தகைய சித்தாந்தங்களின்  வெளிப்பாடுதான் இயேசுவை சிலுவைச்சாவுக்குக் கையளித்த அவனது தீர்ப்பு. இது ஒருபுறம் இருக்க இயேசுவின் சிலுவைச் சாவைப்பற்றி திருச்சபை விசுவசித்து அறிக்கையிடுவது என்ன தெரியுமா?  கிறிஸ்துவின் சிலுவைச்சாவில் பிலாத்து, கயபா, ஏரோது, யூதாஸ், யூத குருக்கள்,  போன்றவர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தனி ஒரு மனிதனோ, அல்லது ஒரு இனமோ இயேசுவின் சிலுவை மரணத்துக்குக் காரணமல்ல. மாறாக உலக மக்களின் அனைத்துப்பாவங்கள் மட்டுமே இயேசுவின் மரண தீர்ப்புக்கும் சிலுவைச் சாவுக்கும் காரணம்.  அதாவது நானும் எனது பாவங்களும் மட்டுமே இயேசுவின் மரணத்தீர்ப்புக்குக் காரணம்.  இந்த உலகம் பாவத்தில் மூழ்கித் தவித்தபோது இறைத்தந்தை என்னை என் பாவங்களிலிருந்து மீட்டு எனக்கு நிறைவாழ்வை, நிலை வாழ்வை, நித்திய பேரின்பத்தை, அளிக்க வகுத்த மீட்புத்திட்டதில் இறுதியாக தம் மகனையே பாவம்போக்கும் பலியாகக் கொடுக்கச் சித்தமானார்.  எனவே இயேசுவை சிலுவைச்சாவுக்கு தீர்ப்பிட்டது நானும் என் பாவங்களும் மட்டுமே. 

லேவி.19:15தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.

செபம் : இறைவா இந்த உண்மையை நான் உணரவும், ஏற்று அறிக்கையிடவும், வேண்டிய மன தைரியத்தை எனக்குத்தாரும். அதே நேரம்  இனிமேலாவது இதுவரை வாழ்ந்த பாவ வாழ்க்கையை உதறித்தள்ளி உமக்கேற்ற பிள்ளையாக வாழ எனக்கு அருள் தாரும். குற்றத்தை என்மேல் வைத்துக்கொண்டு மற்றவர்மேல் அப்பழியைச் சுமத்தும் போது நானும் ஒருபிலாத்துதான் என்பதை உணர்ந்து வாழ எனக்கு வரம் தாரும்.  அப்போதுதான்  சிலுவைப்பாதையின் முதல் நிலையை தியானிப்பது எனக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    
நிலை 2:
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவின் தோளில் சிலுவையை சுமத்துகிறேன்

இயேசுவின் காலத்தில் உரோமைப் பேரசில் உரோமை குடிமக்களை சிலுவையில் அறைந்து கொல்வது தடைசெய்யப்பட்டிருந்தது.  காரணம் சிலுவை என்பது அவர்களுக்கு அவமானத்தின் சின்னம்.  அத்தகைய சிலுவைதான், கொடூரமான கசையடிகளாலும், கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத சித்திரவதைகளாலும் காயம் பட்டு இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த இயேசுவின் தோளில் சுமத்தப் படுகிறது.   ஆம் என் பாவங்களுக்காக இயேசுவின் தோளில்  அந்த அவமானத்தின் சின்னம் சுமத்தப்படுகிறது.  எசா.53:5-7 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.…..ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவரில் மனித சாயலே இல்லாததால் பிலாத்து சாட்டையால் அடிக்கப்பட்டு தலையில் முள்முடி சூட்டப்பட்டு கொண்டுவந்து நிறுத்தப்பட்ட இயேசுவை சுட்டிக்காட்டி “இதோ மனிதன்” என்று கூறினான்.
அந்த சிலுவையை வடிவமைத்த, உருக்கொடுத்த கொடூரமான, அதீதமான செயலை செய்தது நான்தான்… எனது பாவங்கள்தான்…. இருப்பினும்  “என்னால் செய்யப்பட்ட அந்த சிலுவையை” நோக்கி முன்சென்று தம் தூய கரங்களை நீட்டி, வாங்கி , முத்தமிட்டு தம் தோளோடு அணைத்துக்கொண்டது அவர் என்மேல் கொண்ட அன்பினால் மட்டும்தானே,  என்மீது இருந்த குற்றப்பலியை போக்கத்தானே. [எசா.53:2-11].  நான் நினைவில் கொள்ளவேண்டியது
v  என் பாவங்களிலிருந்து என்னை மீட்கவே அவமானத்தின் சின்னமான சிலுவை இயேசுவின் தோளில் சுமத்தப்பட்டது.
v  இயேசு என் மேல் கொண்டிருக்கும் அன்பு எவ்வளவு ஆழமானது, நிபந்தனையற்றது என்றால் என்னை இரட்சிக்க இந்த அவமான சின்னமான சிலுவையில் அறையப்பட்டு மரிக்கவும் தயாராய் இருக்கிறார்.

செபம்:இயேசுவே என் நேசரே இந்த செயலை நான் தியானித்து என் பாவத்தின் கொடூரத்தை உணரவும் உமது பேரன்பின் ஆழத்தை என் மனதில் பதித்துக்கொள்ளவும் எனக்கு உதவி செய்யும்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    
நிலை 3:
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவை முதன் முறை கீழே விழச் செய்கிறேன்



என் இயேசு தொலைதூரத்தில் இருந்துகொண்டு என்னை மீட்கும் கடவுள் அல்ல; ஆனால் பாவம் தவிர மற்றனைத்திலும் என்னைப்போல் பிறந்து என்னோடு வளர்ந்து, வாழ்ந்து  என் பாவங்களைச் தம்மேல் ஏற்றுக்கொண்டு என்னை மீட்கும் கடவுள் என் இயேசு. என் பாவநிலையையும் தாழ்நிலையையும் கண்டு பரிவு காட்டாத தலைமைக் குரு அல்ல என் தலைமைக்குரு.  மாறாக 
v  கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப்போல் ஆனவர் என் தலைமைக்குரு. 
v  இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பவர்.
v  இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். தாங்கமுடியா பாவச்சுமையால் என்னோடு தரையில் விழுந்துகிடப்பவர் என் இயேசு. ஏன் தெரியுமா? நானும் அவரோடு பாவமற்ற நிலையில் எழுந்து அவரோடு மீட்புப் பாதையில் அவர் பின்னே செல்ல.
செபம்: தாழ்ச்சியும் சாந்த குணமும் உள்ள ஓ என் நேச இயேசுவே என் இருதயம் உம் இருதயத்தை ஒத்ததாகச் செய்யும்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.ஆமென்    
நிலை 4:
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு தம் தாயைச் சந்திக்கிறார்

ஒருவனின் எழுச்சிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உலகப் பழமொழி.  ஆனால் துக்க துயர வேதனைகளின் மொத்த உருவமாக நிற்கும் கடவுளின் மகனுக்குப்பின் இறைவனின் தாய் என் வியாகுலத்தாய். தன் தாயை நேசிப்பவர்  ‘தன் துன்பங்களை தன் தாய் அறியக்கூடாது’  என்று அனைத்தையும் மறைத்துவிடுவர்;  ஆனால் இயேசு தம் தாயை அதைவிட மேலாய் நேசித்தார். எனவே தம் துயரத்தில் பங்குகொள்ளும் பாக்கியத்தை அவருக்கு அளித்தார்.
வியாகுலத்தாயின் அன்பு அதனிலும் பெரிது.  நான் மீட்புப் பெற்று நிலைவாழ்வைப் பெறவேண்டும் என்பதற்க்காக  தான் பெற்ற மகனை துன்பங்களையும் சிலுவைச் சாவையும் ஏற்கச் செய்யும் அளவுக்கு வியாகுலத்தாய் என்னை நேசிக்கிறார். என் இயேசுவின், என் வியாகுலத்தாயின் நேசத்தை பெற தகுதியுள்ளவனாகவா வாழ்கிறேன்? தன் மகன் இறைவனின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற துன்பங்களையும் சிலுவைச்சாவையும் ஏற்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டீரே, ஏற்றுக்கொண்டீரே, அதனால்தானே இயேசுவின் சிலுவைப் பயணத்தில் அவரைச் சந்தித்து அனைவராலும் கைவிடப்பட்ட அவரது தனிமையிலும் வேதனைகளிலும் அவருக்கு ஆறுதலாக இருந்தீர்கள் அம்மா. ஆனால் என் அன்பு எவ்வளவு சுயநலமானது?

செபம்: என் துன்பத்தை ஏற்பதில் அதைவிட பிறரின் துன்பத்தில் பங்கு கொள்வதில், உதவுவதில் உள்ள புனிதத்தை எனக்குக் கற்பித்தருளும் அம்மா. உம் மகனுக்குக் கொடுத்த ஆறுதலை துன்பத்தில் வாடும் எனக்கும் கொடுத்தருளும் அம்மா.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    
நிலை 5:
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
சிலுவையைச் சுமக்க இயேசுவுக்கு சிமியோன் உதவிசெய்கிறார்
 

இயேசு வேதனையாலும் களைப்பாலும் சிலுவையின் பாரத்தாலும் தொடர்ந்து நடக்கமுடியாது என்ற நிலை.  படைவீரர்களுக்கோ சிலுவையில் அறையும் முன் இயேசு இறந்துவிடக் கூடாது என்ற வெறி. அவ்வழியே வந்துகொண்டிருந்த சிமியோனை சிலுவையை சுமந்து வரும்படி வற்புறுத்துகிறார்கள். முதலில் தயங்கிய தவிர்க்க நினைத்த சிமியோன் மனமிரங்கி இயேசுவின் சிலுவையை சுமப்பது ஒரு இரக்கசெயல் மட்டுமல்ல அது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்பதை உணர்ந்து இயேசுவின் சிலுவையை வாங்கி தன் தோளோடு அரவனைத்துக்கொள்கிறார்.

செபம்: என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்று கூறினீரே, இயேசுவே! உமது சிலுவையை எனக்குத்தாரும்.  உம் வேதனைகளில் நானும் பங்குபெறச் செய்தருளும். நோயால், தனிமையால் சிறை வாழ்வால் மரணிக்கும் தருவாயில் துன்பப்படுபவருக்காய், நிர்பந்தத்தால் அல்லது தவிர்க்க முடியததால் அல்ல விருப்பத்தோடு உதவ எனக்குக் கற்பித்தருளும். இயேசுவே உமது சிலுவையை எனக்குத் தாரும்; யாருடய வற்புறுத்தலாலும் அல்ல மனமுவந்து உமது சிலுவையை சுமக்க முன்வருகிறேன்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    



நிலை 6:
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
வெரோனிக்கா இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறார்

அளவுகடந்த அன்பால் செய்த ஒரு சிறு செயல்.  என் மனதில் பதிந்துவிட்ட என்னை  நெகிழவைத்த அற்புதமான காட்சி. வேதனையின் உச்சத்தில் துடித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனைச் சுற்றி படை வீரர்கள் மற்றும் வெறிகொண்டு கொக்கரிக்கும் மக்கள் கூட்டம்; அந்த மனிதனை நெருங்குவது இயலாத காரியம். அத்தனையையும் தாண்டி ஒரு பெண்மணி வெரோனிக்கா, சமுதாய கட்டுப்பாடுகளையும்,  தடைகளையும் உடைத்தெறிந்து இயேசுவின் முன்னே வருகிறார். இயேசுவுக்குக் கொடுக்க அப்பெண்ணிடம் ஏதும் இல்லை.  தான் வைத்திருந்த துணியால் இயேசுவின் முகத்தில் படிந்திருந்த வியர்வை, தூசி, அசுத்தம் அனைத்தையும் துடைக்கிறார். என்ன ஒரு அற்புதமான செயல்.  எத்துணை ஆறுதல் என் இயேசுவுக்கு.
அவள் ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்த பெண்தான்; ஆனால் தன் மனதில் சரியெனப்பட்டதை எந்த சூழலிலும் செய்யத்தயங்காத துணிவைக் கொண்டவள்.  அதனால்தான் அவள் செய்த சிறிய அன்புச் செயல் காலங்களைக் கடந்து சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது.  இத்தகைய துணிவு என்னிடம் ஏன் இல்லை, இத்தகைய செயல்களை என்னால் ஏன் செய்யமுடியவில்லை? காரணம் என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? என் உறவும் இந்த உலகமும் என்ன நினைக்கும்? நமக்கு எதற்கு இந்த வீண் வம்பு? நான் safeஆ இருப்பதுதன் எனக்கு நல்லது. இயேசுவே இந்த மனநிலையை என்னிடமிருந்து அகற்றியருளும்.  என் சொல், செயல், வாழ்வு அனைத்தும் உம்மால் வழிநடத்தப்படும் வண்ணம் தூய ஆவியாரே எனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் உம் வல்லமையால் நிறைத்தருளும். 
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    
நிலை 7
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவை இரண்டாம் முறை கீழே விழ வைக்கிறேன்

இயேசு மேலும் மேலும் பலவீனப்படுவதால் சிலுவையின் பாரத்தை முன்பிருந்ததைவிட  அதிகமாக உணர்கிறார்.  இந்த வலியும் துன்பமும் தற்காலிகமானது ஆனால் அதற்கு தம் தந்தை அளிக்கப்போகும் மாட்சி நித்தியத்திற்குமானது என்பதை இயேசு அறிவார். இயேசுவுக்கு தம் தந்தை அளிக்கக் காத்திருக்கும் மாட்சியை தம் மனதில் கொண்டுவருகிறார், தன் மீட்புப் பாதையில் தொடர்ந்து நடக்கும் ஆற்றலைப் பெறுகிறார். தந்தையே நீர் மட்டுமே என் நம்பிக்கை, இந்த உலகின் துன்பங்கள் துயரங்கள், தோல்விகள், அனைத்துமே தற்காலிகமானதுதான். வான்வீட்டில் உம்மோடு நித்தியத்திற்கும் வாழும் வாழ்வே நிரந்தரம் என்பதை நான் உணரச்செய்யும்.  உலகு சார்ந்த அனைத்துமே கானல் நீராக மறையக்கூடியவை, உமது மாட்சியும் பேரிரக்கமும் மட்டுமே நிரந்தரம் என்பதை உணரச்செய்யும்.
அதே விண்ணக மாட்சியை இறைவன் எனக்கும் வாக்குத்தத்தம் செய்திருப்பதை என் கண்முன் கொண்டுவந்தால் நானும் பாவ வாழ்க்கையை விட்டு எழுவது எளிதுதானே.  தான் செய்வது அனைத்தும் உம் மகிமைக்கே என்று உரைத்த இயேசு மீண்டும் தரையில் விழுகிறார்.    என் மீது கொண்டிருந்த அளவற்ற நிபந்தனையற்ற அன்பால் இவ்வளவு தூரம் பாரமான சிலுவையை சுமந்து வந்துவிட்டார். தாம் சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட நேரத்திலிருந்து தனக்கு நேர்ந்த அவமானங்கள், கசையடி, முள்முடி, பாரச்சிலுவை அனைத்தையும் நினைத்து இந்த பயணத்தைக் கைவிட்டிருக்கலாம்.  ஆனால் என்னை பாவத்திலிருந்து நித்தியவாழ்வுக்கு அழைத்துச்செல்வது அவர் லட்சியம் அல்லவா? எனக்காக மீண்டும் எழுந்துவிட்டார். கல்வாரி முகட்டை நோக்கி உத்வேகத்துடன் நடக்க ஆரம்பித்துவிட்டார். 
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    

நிலை 8
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
எருசலேம் மகளிருக்கு இயேசு ஆறுதல் சொல்கிறார்

இயேசு அனைவருக்கும் நல்லதுதானே செய்தார், அவருக்கு ஏன் மரணதண்டனை? அவரை ஏன் சிலுவையைச் சுமக்கவைத்து இழுத்துச் செல்கிறார்கள்? நிகழ்பவை அனைத்துமே பெண்களின் புரிதலுக்கு அப்பார்ப்பட்டதாகவே இருந்தன. நடப்பவை அனைத்தும் அநியாயங்கள் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்தது.  அந்த எண்ணம்தான் அவர்களை அழுது புலம்ப வைத்தது.  இயேசுவோ கலங்கவில்லை, இந்த பெண்கள் கவலைப்பட வேண்டிய கலங்கவேண்டிய உண்மையான பிரச்சனைகள்  என்னவென்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்.  முள் முடியின் காயங்களாலும் தனக்கு நேர்ந்த அவமானங்களாலும் சிரசே வெடிக்கும் அளவுக்குத் தலையில் வலி, கசையடி காயங்களிலிருந்து பெருக்கெடுத்து ஓடிய இரத்தத்தால் மயங்கி விழும் நிலை,  இருமுறை முகம்குப்புற விழுந்ததில் உதடுகள் கிழிந்து வீங்கி பேச சிரமப்படும் நிலை,  ஒவ்வொரு முறை இயேசு கீழே விழும்போதும் நடக்கமுடியாமல் தயங்கி நின்றபோதும் ஈவு இரக்கமற்ற படைவீரர்கள் இயேசுவை சரமாரியாக சாட்டையால் அடித்தார்கள். இருப்பினும், இயேசு தன் பின்னால் அழுதுகொண்டு வரும் எருசலேம் பெண்களுக்காகச் சிறிது நிற்கிறார்,  அவர்களுக்கு ஆறுதல் மட்டுமல்ல சிறிது அறிவுரைகளும் சொல்ல விரும்புகிறார். தமது துன்பங்களை எண்ணி கலங்குவதைவிட அப்பெண்கள், அவர்களது பிள்ளைகள், எதிநோக்கியுள்ள பிரச்சனைகள் பற்றி அவர்கள் மனதில் பதியவைக்க விரும்புகிறார். இயேசு தாம் துன்பப்பட்டபோது மனுக்குலம் பட்ட, படப்போகும் துன்பங்களை நினைத்துப்பார்த்தார்,  துன்பப்பட்டோரைத் தேடிச்சென்றார்.   இயேசுவே எனது துன்பங்கள் வேதனைகள் பற்றியே நினைத்துக்கொண்டிராமல் பிறர் படும் துன்பங்களில் நாம் அக்கறைகொள்ளவேண்டும் என்பதையே இயேசு நமக்குப் படிப்பிக்கிறார்.
இயேசுவே என்னால் புரிந்துகொள்ள முடியாத தேவையில்லாதவற்றால் நான் எனது அமைதியை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.  இத்தகைய தருணங்களில் என் கவலைகளை உம் பாதத்தில்வைத்துவிட்டு அமைதிஅடைய எனக்கு வரம் தாரும்.  என்னால் மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளவும், என்னால் மாற்றமுடிந்ததை மாற்றுவதற்கு வேண்டிய பலத்தையும் எனக்குத்தந்தருளும்.  நான் உண்மையில் கவலை கொள்ளவேண்டியவற்றையும் கவலைகொள்ள தேவையில்லாதவற்றை பகுத்துணர்ந்து செயல்படவும் எனக்கு வரம் தாரும். 
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    
நிலை 9
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்

இயேசுவின் நிலைகண்டு மனம் கசியாத படைவீரர்களின் சித்ரவதைகளும் கசையடிகளும், யூதர்களின் பரிகாசங்களும் இன்னும் தொடர்கின்றன.  இயேசு மூன்றாம் முறை நிலைகுலைந்து தரையில் விழுகிறார். இருப்பினும் தயக்கமின்றி எழுந்து கல்வாரியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.  நம் மீட்பரின் உறுதி குலையவில்லை, குறையவில்லை… காரணம் நம்மீது அவர் கொண்டுள்ள் அன்பு என்றும் குறைவுபடாத ஒன்று. நம் ஆன்மீக வாழ்வில், இறைவனின் அளவுகடந்த சக்தி வேண்டுமானால், நாம் அவர்மேல் கொண்டுள்ள அன்பும் குறைவற்றதாக இருக்கவேண்டும். இயேசுவே உம்மிடம் மட்டுமே என்பலத்தைக் காண்கிறேன்.  காரணம் உம்மிடம் மட்டுமே, என்றும் குறையாத அன்பும், ஆற்றலும், உள்ளன. எபி. 12:2  “நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்”. 
இயேசுவே என்னில் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.  மனவருத்தம், சோர்வு, துன்பம், துக்கம், துயரம், வேதனை நம்பிக்கையின்மை, விரக்தி இவற்றால் மனமொடிந்து வாழ்வோருக்கு நம்பிக்கையூட்டும் தூதுவனாய் என்னை வாழச் செய்யும்.  
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    
நிலை 10
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள்

அனைத்தையும் தாண்டி தன் பலிபீடமான கல்வாரிக்கு வந்துவிட்டார்.  உடன்படிக்கையின் கிண்ணம் இயேசுவின் இரத்தத்தால் நிரம்பி வழிகிறது,  இதற்கு மேலும் கடவுளின் மகனை மோசமாக நடத்த முடியாது, அவமானப்படுத்த முடியாது என்று சொல்லும்  அளவுக்கு ஒரு செயலை படைவீரர்கள் செய்தனர்.  படைவீரர்கள் ஆட்டின் தோலை உரிப்பதுபோல் இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள். உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் திறந்து மீண்டும் இரத்தம் பீரிட்டு வருகிறது,  காயங்கள் திறக்கப்பட்ட வேதனையில் துடிக்கிறார், கதறுகிறார். இயேசுவின் பரிசுத்த மேனி நிர்வாணமாக்கப்படுகிறது.   தன் உடல் வேதனையை விட உலகத்தில் நிறைந்துள்ள எண்ணிலடங்கா பாவங்களினால் தன் ஆன்மா காயப்பட்டிருப்பதையே மிகுந்த வேதனை நிறைந்ததாகக் கருதுகிறார்.  இறைவனின் ஆலயமாகப் படைக்கப்பட்ட என் உடலை  இச்சையாலும், பரத்தமையாலும், கேளிக்கையாலும் சிதைத்து கறைபடிய செய்ததையே அவமானத்துக்குரியதாய் கருதுகிறார். இத்தகைய பாவங்களால் என் வாழ்வில் எத்துனைமுறைஇயேசுவைஇந்த உலகத்துக்கு முன் நான் நிர்வாணப்படுத்தியிருக்கிறேன். இத்தகைய பாவங்களுக்காய் அமைதியில் இயேசுவின் மன்னிப்பை நாடுவேன்.  இனிமேலும் என் ஆன்மாவைக் கறைபடுத்தி என் இயேசுவை நிர்வாணப்படுத்தமாட்டேன் என்று அவருக்கு வாக்குக் கொடுக்கிறேன்.
இத்தகைய என் பாவங்களை உமது உடலிலும் ஆன்மாவிலும் தாங்கிக் கொண்டீரே என் இயேசுவே. கடந்த காலங்களிலும் இன்றும் நான் செய்த இத்தகைய பாவங்களை உமது பரிவிரக்கத்தை முன்னிட்டு மன்னித்தருளும்.  நீர் அடைந்த  இந்த அவமானங்களால் என் அவமானத்தை துடைத்தெறிந்ததை நான் என்றும் நன்றியுடன் என் நினைவில்கொள்ளச் செய்தருளும். உமது ஆடைகளைக் களைந்தபோது எனது நிர்வாணமான ஆன்மாவை உமது தூய்மையான ஆடையால் உடுத்தினீர் என்பதை நான் என்றும் மறவேன் இயேசுவே. கற்பை புனிதமாகப் போற்றிய இயேசுவே நான் கற்புடன் வாழவேண்டிய பலத்தைத்தாரும். உடல் தூய்மைக்கு எதிராக நான் இழைக்கும் அனைத்து ஒழுக்கக்கேடான செயல்களையும் நான் விட்டொழிக்க எனக்கு உதவும்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    

நிலை 11
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்


வேதனையால் நடுங்கிக்கொண்டிருக்கும் இயேசுவின் உடலை சிலுவையின் மீது வைத்து கைகளையும் கால்களையும் தங்கள் சக்திகொண்டமட்டும் இழுக்கிறார்கள்.  ஒரு படைவீரன் துருப்பிடித்த ஒரு பெரிய ஆணியை, அவரது உள்ளங்கையில் வைத்து, தன் சக்தி முழுவதையும் ஒன்றுசேர்த்து, ஒரு பெரிய சுத்தியால் அடிக்க, அந்த ஆணி, என் இயேசுவின் சதைகளை கிழித்து, எலும்புகளை நொறுக்கி, இரத்தத்தை பீரிட்டுவரச் செய்து, அங்கு நிற்கும் அன்னையின் சுவாசத்தையே நிறுத்தும் அளவுக்கு, சிலுவையில் இறங்குகிறது.  சுத்தியலை பிடித்திருந்தவனின் கை, மீண்டும்  மீண்டும் ஒவ்வொரு ஆணியாக, இயேசுவின் கைகளிலும் கால்களிலும் இறங்குகிறது. ஒவ்வொரு சுத்தியல் அடிக்கும்போதும், சக்தி முழுமையும் இழந்ததால் முனகல் சத்தம் மட்டுமே இயேசுவிடமிருந்து கேட்கிறது. தன் பலமெல்லாம் ஒன்றுகூட்டி “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று தம் தந்தையை நோக்கிச் செபிக்கிறார். ஏன் தெரியுமா? மத்.5:44  “உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்று தம் சீடர்களுக்குக் கற்பித்ததை வாழ்ந்துகாட்டுகிறார்.   இயேசுவின் கரங்களிலும் கால்களிலும் ஆணிகளை அறைந்த செயல் இயேசுவிடமிருந்த மனித மாண்பையோ ஆன்மாவின் புனிதத்தையோ சிறிதும் சிதைக்கவில்லை என்பதே நமது தூய்மையான வாழ்வுக்கு  நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.  நாம் தூய்மையான வாழ்வு வாழ வேறு எந்த எடுத்துக்காட்டும் தேவையில்லை.   இறைவா உமது மகன் சிலுவையில் அறையபட்டபோது எனக்காக செபித்தார். எனக்குத் தெரியும், உமது மகனின் செபத்திற்கு நீர் என்றுமே பாராமுகமாய் இருந்ததில்லை.  நானும் உம் மகன்தானே, எனது செபத்தைக் கேட்டருளும். நான் பிறரைக் காயப்படுத்தியிருந்தால் உம் திருமகன் எனக்காய் கேட்ட மன்னிப்பை எனக்கு அளித்தருளும்.  பிறர் என்னைக் காயப்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் அதே மன்னிப்பை அளித்தருளும். இயேசுவே நீரே எனது வலிமையாய், கோட்டையாய், கேடயமாய், அனைத்துமாய் இருந்து பாவமற்ற வாழ்க்கையை, கற்பு வாழ்க்கையை அச்சுறுத்தும் அனைத்து தீமைகளிலிருந்தும் என் உடலையும் ஆன்மாவையும் காத்து உம்மிடம் வந்து செம்மறியின் விருந்தில் பங்குகொள்ளும் பாக்கியத்தை எனக்கு அளித்தருளும் 
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.ஆமென்    
நிலை 12
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவை சிலுவையில் உயிர்விடுகிறார்

சிலுவையில் இயேசு சொன்ன வார்த்தைகளை எண்ணிப்பார்ப்போம்
v  “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”
v  “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்”
v  “அம்மா, இவரே உம் மகன்”, “இவரே உம் தாய்”
v  “தாகமாய் இருக்கிறது”
v  “எல்லாம் நிறைவேறிற்று”
v  “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்”
    “தந்தையே உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்ற தனது இறுதி செபத்தை முடித்தபின் தம் இறுதி மூச்சை ஆழமாக உள்வாங்கி தமது ஆவியை விடுகிறார் இயேசு. அவர் இறந்த அக்காட்சியைப்பார்த்த படைவீரருள் ஒருவன் உண்மையிலேயே இவர் இறைமகன்தான் என்று சான்று பகர்கிறான்.  தம் தந்தை தம்மிடம் ஒப்படைத்த பணியை எந்த குறையுமின்றி நிறைவேற்றி தன் தந்தை அளிக்கப்போகும் பரிசைப்பெற அவரிடம் செல்லும் நேரம்.

¦  இறைத்தந்தை இயேசுவுக்கு அளித்த மீட்புப் பணியில் நானும் இணைக்கப்பட்டுள்ளேன்.  எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை உணர்ந்து அதன்படி வாழ்கிறேனா?
¦  நான் என் பணியை முறையாக எந்த குறையுமின்றி நிறைவேற்றிவருகிறேனா?
¦  இறைவன் என்னைத் தீர்ப்பிடும்போது இயேசு ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.’ என்று சொல்லும்படியானதா என் வாழ்வு? அல்லது  “சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்” என்று சொல்லும்படியானதா என் வாழ்வு?
¦   “இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்” என்ற  தூய பவுல் அடிகளாரைப் போல் நானும் சொல்லமுடியுமா?
¦  தூய ஆவியாரே இயேசு கிறிஸ்து விட்ட இறுதிமூச்சில் ஒரு துளியை  நான் சுவாசிக்கச் செய்தருளும்;  ஆன்மாக்களை மீட்க இயேசுகொண்டிருந்த தாகத்தில் ஒருபகுதியேனும் என்னுள் எழச் செய்யும்.
¦  என்னை மீட்கும் பணிக்காக இத்தனை துன்பங்களையும் பட்டு என்னைக் காத்தமைக்கு நன்றி இயேசுவே.
¦  உம் மீட்புப் பணி தொடர நான் செய்யவேண்டியதை எனக்குக் காட்டியருளும்.  அதற்கு வேண்டிய ஆற்றலையும் தாரும்.  தூய ஆவியாரின் துணையால் நானும் அதனைச் செய்து முடிப்பேன்.
¦  இயேசுவின் துன்பங்களும் இறப்புமே எனது பணிக்கு கிடைத்த உத்வேகம். நம் ஆன்மீக வாழ்வுக்கு இதைவிட சக்தி தேவையில்லை.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    
நிலை 13
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசுவின் உடலை அன்னை மரியாளின் மடியில் கிடத்துகிறார்கள்

இயேசுவின் ஆன்மா பாதாளத்திற்கு இறங்கிச் சென்றுவிட்டது; உயிரற்ற நலிவுற்ற சிதைந்த உடல் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு சோகத்தின் உச்சியில் இருந்த அன்னை மரியாவின் கரங்களில் கொடுக்கப்படுகிறது. தன் மகனின் உடலை வாங்கி பெத்லகேமில் குழந்தை இயேசுவை தன் மார்போடு அணைத்துக்கொண்டதுபோல் இப்போதும் அணைத்துக்கொள்கிறார், இயேசுவை, தன் மகனை, தன் இறைவனை  ஆராதிக்கிறார், அழக்கூட உடலில் சக்தியில்லை. உலகமே உயிரற்று வீழ்ந்ததுபோல் உணர்கிறார். கல்வாரி மயான அமைதியில்.  “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” என்ற செய்தி அன்னையின் காதுகளில் ஒலிக்க ,தான் விதைக்கப்போகும் அந்த விதை, முளைக்க காத்திருக்கப்போகிறார்… நாமும்தான்.  தோல்விகளால் வேதனைகளால் வாழ்வே போய்விட்டது என்று தோன்றும் நேரங்களில், நீரே என் கடவுள் என்பதையும், எனவே நான் மீண்டும் எழுவேன் என்ற நம்பிக்கையையும்  இழக்காமல், உமது அருளை பட்டுமே இறுகப்பற்றிக்கொள்ள எனக்கு உதவும்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.
ஆமென்    

நிலை14
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவின் உடலை அடக்கம் செய்கிறேன்

அன்னை மரியா அதிக நேரம் தன் மகனின் உடலை தன் மடியில் வைத்திருக்க முடியவில்லை; கடவுளின் மகன் என்று சொல்வதற்கு இயேசுவின் உயிர் அற்ற உடல் மட்டுமே இருந்தது.  அவரின் ஆன்மா உடலைப்பிரிந்து பாதாளத்திற்கு இறங்கிச் சென்றுவிட்டது.  இயேசுவின் உடலை விரைவில் அடக்கம் செய்தாகவேண்டும்.  பெரிய சனி, இயேசுவின்ஆன்மா பிரிந்த, உடலின் தன்மையை உணர்த்துகிறது. மற்றவர்களைப்போலவே இயேசுவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.  இயேசுவுக்கு இடப்பட்ட தீர்ப்பையும், பிலாத்துவின் அரண்மனையில் அவருக்கு நேர்ந்தவைகளையும், கல்வாரிக்கு செல்லும் வழியில் படைவீரர்கள் அவருக்கு அளித்த சித்ரவதையையும், ஆடைகள் உரியப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்த விதத்தையும் பார்த்த அனைவருமே இயேசுவின் இறைத்தன்மையில் ஐயம் கொண்டிருப்பார்கள். பிறந்தது மாட்டு கொட்டகை, தலைசாய்க்கவும் இடமில்லாத பகிரங்க வாழ்க்கை.  அவரது சிதைந்த உடலை அடக்கம் செய்ய இரவல் கல்லறை.  இவர் எப்படி இறைமகனாக இருக்க முடியும். நிச்சயம் பேசியிருப்பார்கள். இது என்னுடைய இயல்பும்தானே.  முழு உண்மையும்  தெரிந்துகொள்ளும் பொறுமையின்றி மற்றவரைப்பற்றி ஒருமுடிவுக்குவந்து  அதை பிறர் அறிய பரப்பிவிடுகிறேனே. என்னில் சந்தேகம் வரும்போது நீர் எனக்கு கொடையாகாக் கொடுத்த விசுவாசத்தை பற்றிக்கொள்ளச் செய்யும். நான் காணமுடியாதவைகளையும், நம்ப இயலாதவைகளையும் விசுவாசக் கண்களைக்கொண்டு ஏற்றுக்கொள்ளச் செய்யும். உமது பாடுகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுவதன் வழியாக  இயேசுவே என்னை உம்மைப்போல் ஆக்கியருளும்.  உமது பாடுகளின் முடிவு உயிர்ப்பும் மகிழ்சியுமே என்பதை நான் உணரச்செய்யும்.  அந்த உயிர்ப்பையும் விண்ணக மாட்சியில் பங்கு பெறுவதற்கு ஏற்ற வாழ்வு நான் வாழவும் எனக்குத்துணையாய் வாரும் இயேசுவே. ஆமென்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி – எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவது.ஆமென்    

Comments

  1. மனதைத் தொடும் சிலுவைப் பாதை தொகுப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீட்பின் பாதை